உணர்ச்சியும் இசையும் ஒருங்கே இணைந்திருக்கும் வரிகளை எழுதுவதில் அந்த நாட்களில் புகழ் பெற்றவர் பாபநாசம் சிவன் அவர்கள். எடுத்துக்காட்டாக, அவரது பாடல்களில் பக்தி என்று எடுத்துக்கொண்டால், தெய்வ பக்தியை மீறிப் பெற்றோரின் மீது பூண்ட பக்திக்கு நிகரில்லை என்ற உண்மை மனதில் தோன்றியது . இந்த அருமையான கருத்தை உள்ளடக்கிய அற்புதப் பாடல் ஒன்று 1940களில் வெளிவந்த 'ஹரிதாஸ்' என்ற படத்தில் , பாபனாசம் சிவன் அவர்களின் வரிகளுடன் இதோ உங்களது கவனத்திற்கு . 1944, 45, 46 ஆகிய மூன்று ஆண்டுகள் ஒரே திரையரங்கில் தொடர்ந்து ஓடி சாதனை புரிந்த ஒரு படமாகத் திகழ்ந்தது 'ஹரிதாஸ்' . சிவன் அவர்களின் வரிகளுக்கு அவரேதான் இசை அமைப்பார் என்று கேள்வியுற்றிருக்கிறேன் ! ஆனால் ஓரிடத்தில் இது திரு ஜி.என்.ராமநாதன் அவர்களின் இசை என்று குறிப்பிட்டுள்ளதையும் கண்டேன் ! இதோ பாடல் வரிகளைத் தொடர்ந்து பாடலும் வருகிறது : அருமையான கருத்தாழமும் அதே சமயத்தில் எளிமையும் மிகுந்த, அலங்காரமற்ற, ஆனால் அற்புதமான வரிகள் !
https://www.youtube.com/watch?v=VsJ-TDXJgIQ
திரைப்படம்: ஹரிதாஸ்;
ஆண்டு: 1944;
இயற்றியவர்: பாபநாசம் சிவன்;
இசை: ஜி. ராமநாதன்;
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்.
அன்னையும் தந்தையும் தானே பாரில் (2)
அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம் (அன்னையும்)
தாயினும் கோவில் இங்கேது
தாயினும் கோவில் இங்கேது ஈன்ற
தந்தை சொல் மிக்கதோர் மந்திரமேது
தந்தை சொல் மிக்கதோர் மந்திரமேது
சேயின் கடன் அன்னை தொண்டு
சேயின் கடன் அன்னை தொண்டு புண்ய
தீர்த்தமும் மூர்த்தி ஸ்தலம் இதில் உண்டு
தீர்த்தமும் மூர்த்தி ஸ்தலம் இதில் உண்டு (அன்னையும்)
தாயுடன் தந்தையின் பாதம் - என்றும்
தலை வணங்காதவன் நாள் தவறாமல்
கோவிலில் சென்று என்ன காண்பான்
நந்த கோபாலன் வேண்டும் வரம் தருவானோ
பொன்னுடல் தன்பொருள் பூமி
பொன்னுடல் தன் பொருள் பூமி - பெண்டிர்
புத்திரரும் புகழ் இத்தனை வாழ்வும்
புத்திரரும் புகழ் இத்தனை வாழ்வும்
அன்னை பிதா இன்றி ஏது
அன்னை பிதா இன்றி ஏது - மரம்
ஆயின் விதை இன்றி காய் கனி ஏது
ஆயின் விதை இன்றி காய் கனி ஏது
அன்னையும் தந்தையும் தானே பாரில்
அண்ட சராசரம் கண் கண்ட தெய்வம்
அன்னையும் தந்தையும் தானே..... தெய்வம்
--கே.பாலாஜி
23.06.2015

No comments:
Post a Comment