இசையாய் பொங்கும் இயற்றமிழ் - 1
திருவருட்பா வரிகள்
--------------------------------
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
திரைப்படத்தில் கேட்கும் வரிகள் :
---------------------------------------------------
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெரும் நினதுபுகழ் பேசவேண்டும்
பொய்மை பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வுநான் வாழவேண்டும்
தண்முகத்துய்யமணி உண்முகத்தெய்வமணி
சண்முகத் தெய்வமணியே !
முருகபக்திக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது இராமலிங்க அடிகளாரின் இந்தத் திருவருட்பா ! இறைவனிடம் எத்தனையோ வரங்களை நாம் தினமும் வேண்டுகிறோம் ! (மின்சாரம் துண்டிக்கப்பட்டால், அதற்காகவும் வேண்டுகிற , என்னையும் பட்டியலில் சேர்த்துக்கொள்கிறேன் ! :-)} ஆனால், உண்மையாக நாம் என்னவெல்லாம் வேண்டவேண்டும் என்ற ஒரு அழகான பட்டியலையே இங்கு தருகிறார் திரு. ராமலிங்க அடிகளார் !
ஒருமைப்பட்ட மனதுடன் இறைவனை நினைக்கின்ற உத்தமர்களுடைய உறவு, மனதுக்குள் ஒன்றை வைத்து வெளியே வாய்வார்த்தைக்காக வேறொன்று சொல்கிறவர்களைத் திரித்தறிந்து அவர்களைத் தவிர்த்தல், இறைபுகழ் மட்டுமே பேசுதல், பொய் பேசாதிருத்தல், பெருமையுள்ள உண்மை நெறிகளைக் கைபிடித்தொழுகுதல் , மதமான பேய் நம்மைப் பிடிக்காதிருத்தல், பெண்ணாசையை மறத்தல் , இறைவனை மறவாதிருத்தல், நன்மதி , இறைவனின் கருணை நிதி, நோயற்ற வாழ்வு - இவை அனைத்தும் அருளுமாறு ஆறுமுகனை வேண்டுகிறார் ! அடிகளார் தனது வேண்டுதலின் பலனை நமக்கும் உவந்து அளிக்கிறார் என்றே நான் சொல்வேன் ! இதைப் படிக்கும் போது இவையனைத்தும் நமக்கு அருளப்பட்டதாகவே நான் கொள்கிறேன் ! அதல்லவோ நம்பிக்கை !
இறைவனின் கருணைப்பார்வை ஒன்றிருந்தால் போதும், மற்றவை நாம் கேட்காமலே கிடைத்துவிடும் என்றாலும், அதிலும் ஒரு ஐயமும் வைக்காமல் என்ன தேவை மக்களுக்கு என்பதைப் புட்டுப் புட்டு வைத்து விடுகிறார் ! ஒன்று சொல்கிறார் பாருங்கள் - 'நோயற்ற வாழ்வு' என்று ! அற்புதம் ! நோயிருந்தால் இறைவனை நினைக்கும் பக்குவத்திற்கு பங்கம் வந்து விடுமோ என்ற கவலையினால் ! அடிக்கடி நான் புலம்புகின்றேனே 'முதுகு வலிக்குதேடா முருகா' என்று - அது நினைவுக்கு வருகிறது !
இத்தகைய ஒரு பொக்கிஷமாகிய திருவருட்பாவை நமக்கு நல்கிய அடிகளாரின் திருப்பதம் பணிகிறேன். இந்தப் பாடலை திரைப்படத்தின் மூலம் நமக்கு அருளிச்செய்த தன்மையையும் வியக்கிறேன்! இதோ, இயற்றமிழ் இசையாய் பொங்குகிறது பாருங்கள் !
'கொஞ்சும் சலங்கை' என்ற, 1962இல் வெளியான படத்தில் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி அவர்களின் இனிமையான குரலில் இந்த திருவருட்பாவைக் கேட்டு மகிழுங்கள் ! திரைப்படத்திற்காக ஒன்றிரண்டு அடிகளைக் குறைத்து விட்டார்கள் என்ற செய்தியை , தொடர்ந்து வரும் காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் அதியற்புதமான நாதஸ்வர இசை, மறக்கச் செய்து விடுகிறது என்பது ஒரு மகத்தான மறுக்கமுடியாத உண்மை !
பாடல்:- திருவருட்பா.
படம்:- கொஞ்சும் சலங்கை;
இசை:- எஸ்.எம்.சுப்பை நாயுடு;
நாதஸ்வரம்:- காருகுறிச்சி அருணாசலம்;
பாடியவர்கள்:- சூலமங்கலம் ராஜலக்ஷ்மி;
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற...